புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள், திடீரென மர்ம நபர்கள் இருவர் கையில் வெடிபொருள்களுடன் குதித்து சர்வாதிகாரம் ஒழிக என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த மக்களவை உறுப்பினர்கள் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து பதற்றத்துடன் விளக்கினர்.
முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த கண்ணீர்புகைக் குண்டுகளை திறந்ததால் மக்களவைக்குள் மஞ்சள் நிறத்தில் புகை எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மக்களவையில், பூஜ்யம் நேரத்தின்போது நடந்த இந்த சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேரை எம்.பி.க்கள் மடக்கிப்பிடித்து வெளியே அழைத்து வந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இரண்டு பெண்களையும் தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மக்களவைக்குள் இருந்த பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென மக்களவைக்குள் குதித்தனர். அவர்களைப் பார்த்ததும், மக்களவை உறுப்பினர்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதற்கிடையே, அவர்கள் கையில் கண்ணீர் புகைக் குண்டுகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்...
இதற்கிடையே, அவர்கள் மக்களவைக்குள் குதித்தபோது சர்வாதிகாரம் ஒழிக என கோஷமெழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அவர்களை அவைக் காவலர்கள் பிடித்து வெளியே அழைத்து வந்த போது, அவர்களுக்கு ஆதரவாக ஒரு பெண் உள்பட இருண்டு பேர் கோஷமெழுப்பிக் கொண்டே வந்தனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.