ஹரியாணா அரசு மருத்துவனைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடையணிந்து வர வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹரியாணாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த புதிய ஆடைக் கட்டுப்பாட்டு முறை பணியில் உள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் பொருந்தும். இந்த முறை வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேரப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய நடைமுறையை கடைபிடிக்காதவர்கள் பணிக்கு வந்திருந்தாலும் வராததாகவே எடுத்துக் கொள்ளப்படும். சில நேரங்களில் ஆடைக்கட்டுப்பாடு என்பது சில இடங்களுக்கு தேவையானதாக இருக்கும். அதேபோல் மருத்துவமனைக்கு இந்த புதிய ஆடைக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. பணி நேரத்தில் அதிக அளவிலான சிகை அலங்காரம், நகைகள் அதிகம் அணிந்து கொண்டு வருவது, பெரிய அளவில் நகங்களை வைத்திருப்பது போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள் பணி ரீதியிலான ஆடை கிடையாது. அதனால் அவைகள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல டி-சர்ட்ஸ், இறுக்கமான பேண்ட் போன்றவைகளையும் அனுமதிக்க முடியாது. இந்த ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான புதிய நடைமுறை பணிபுரியும் இடத்தில் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தவே கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் மூலம் பணிபுரிபவர்கள் மருத்துவம் சார்ந்த தொழிலுக்கு ஏற்றவாரும், பொது மக்களிடம் நன்மதிப்பையும் பெற முடியும்.
இதையும் படிக்க: மீண்டும் காதலில் விழுந்தார் பில் கேட்ஸ்
இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகங்கள், தொழில்நுட்பம், சமையலறை, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் பொருந்தும். அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும். அனைத்துப் பணியாளர்களும் தூய்மையான உடையணிந்து வர வேண்டும். அதேபோல அவர்கள் தூய்மையான பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களின் தலை முடி சட்டை காலரின் அளவிற்கு மேல் இருக்கக் கூடாது. தனியார் மருத்துவமனைகளில் ஒருவரைக் கூட சீருடை இல்லாமல் காண முடியாது என்றார்.