சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை பாஜகவின் நாடகமே என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் கெலாட் அளித்த பேட்டியில்,
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக பாஜக என்ன செய்தியை சொல்ல முயற்சிக்கிறார்கள்? சத்தீஸ்கரில் நடந்த சோதனைகளைப் பார்கும்போது வேதனை அளிக்கிறது.
இந்த சோதனை குறித்து ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் கோபமடைந்துள்ளனர். இவைகள் எல்லாம் வெறும் நாடகம் என்று மக்களுக்கு புரிந்திருக்கும்.
இதற்கெல்லாம் காங்கிரஸ் பயந்துவிடும் என்று நினைக்கிறார்கள்? காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது, இதனால் தலைவர்கள் பலர் சிறைக்குச் சென்றனர். நாங்கள் இதையும் எதிர்த்துப் போராடுவோம். பாஜக தலைவர்களின் பகைமை அவர்களுக்கு எதிராக செயல்படும்.
முன்னதாக நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், அம்மாநில மூத்த தலைவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.