தெலங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவை முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரை புறக்கணிப்பு, ஆளுநரின் விருந்தை முதல்வர் புறக்கணிப்பது போன்ற தொடர் செயல்களால் மோதல் வலுவடைந்துள்ளது.
இந்நிலையில், ஆண்டுதோறும் செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்யும் குடியரசு விழாவை இந்தாண்டு கரோனாவை காரணம் காட்டி தெலங்கானா அரசு ரத்து செய்வதாக அறிவித்தது.
இதற்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனை உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ஆளுநரை தவிர்ப்பதற்காகவே விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் குடியரசு விழாவை மாநில அரசு நடத்த வேண்டுமென்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நிதிபதிகள், மாநில அரசு குடியரசு நாள் விழாவை நடத்தியே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், மாநில அரசுத் தரப்பில் குடியரசு விழா ஏற்பாடு செய்யப்படாததால், ஆளுநர் மாளிகையில் இன்று குடியரசு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்காமல் முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடு செய்யாததற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.