உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியது முதலே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியாணா, ராஜஸ்தானில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தில்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றங்கரையோர குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதேபோன்று ஹிமாசலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்நிலையில், உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரக்ண்ட் மாநிலத்தில் ஜூலை 15, 16 ஆகிய இரு தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.