இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு முறைப் பயணமாக இன்று காலை இந்தியா வந்துள்ளார்.
இவரை தில்லி விமான நிலையத்தில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் வரவேற்றார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் மெலோனியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அங்கு அவருக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது.
இத்தாலிய பிரதமருடன் துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தாஜானியும், உயர் அதிகாரம் கொண்ட வணிகக் குழுவும் வந்தனர்.
தில்லி வரும் மெலோனி பிற்பகலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார்.
இதற்கிடையே தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் இத்தாலி பிரதமர், ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கிறார். மேலும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும், வருகிற 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும் இந்தியாவின் 8வது ராய்சினா பேச்சுவார்த்தையில் மெலோனி தலைமை விருந்தினராகவும், பேச்சாளராகவும் கலந்துகொள்கிறார். புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்தியாவும் இத்தாலியும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.