கர்நாடகத்தில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவரின் இல்லம் முன்பு கூடி அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு பாலூற்றி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கர்நாடகத்தில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இடையே போட்டி நீடித்து வரும் நிலையில், தொண்டர்களின் இந்த செயல் எதிர்த்தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
224 தொகுதிகளையுடைய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான (136) இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதல்வர் பதவியை வகிக்கப்போவது யார் என்பது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெற்றது.
இதில் தில்லி காங்கிரஸ் தலைமையே கர்நாடக முதல்வரை முடிவு செய்யும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா உள்ளிட்டோர் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தனித்தனியாக சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்தராமையா இல்லத்தின் முன்பு கூடிய அவரின் தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அதோடு மட்டுமல்லாமல் அவரின் இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு பாலூற்றி அபிஷேகம் செய்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.