தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோசை சுட்டு மகிழ்ந்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த இரண்டு நாள்களாக ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று ஊடகங்களில் வெளியான விடியோவில், சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல், அங்கிருந்த சாலையோர உணவகத்துக்குள் நுழைந்தார். அங்கு ஏற்கனவே சமையல்காரர் தோசை சுட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த ராகுல், அவருடன் சேர்ந்து தோசை சுடத் தொடங்கினார்.
ஒரு பாத்திரத்தில் இருந்த மாவை, தோசைக் கல் மீது ஊற்றி தோசை சுட்டார். அருகில் பெரிய கடாயிலிருந்து எண்ணெய் எடுத்து தோசையில் ஊற்றினார். அருகில் இருந்த சமையல்காரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், ராகுல் காந்தி தோசை சுடுவதற்கு ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்தனர்.
தோசை சுடுவதோடு விட்டுவிடாமல், தோசை மீது, தன் கையாலேயே மசாலாப் பொடியை எடுத்து தூவி கமகமவென ஒரு அருமையான மசாலா தோசையை சுட்டெடுத்தார் ராகுல் காந்தி.
இந்த புகைப்படங்களும், விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிக்க.. கணவர் மற்றும் குடும்பத்தினர் 4 பேரை விஷம் வைத்துக் கொன்ற விஞ்ஞானி
தெலங்கானாவில் இன்று மூன்றாவது நாளாக ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்.
மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எல்லோரும் தெலங்கானாவை ஜனநாயகம் ஆட்சி செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், தெலங்கானா உருவானபோது, ஒரே ஒரு குடும்பம்தான், ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஆண்டுகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.