தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றிக்காகத் தலைவர்கள் உழைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அடுத்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் குழு கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து!
அப்போது அவர் பேசியதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். பாஜக தலைமையிலான மத்திய அரசை பதவியிலிருந்து கீழிறக்க வேண்டும். புதுப் புது பிரச்னைகளை கொண்டு வந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு கவனம் கொடுக்காமல் அவர்கள் திசை திருப்பி வருகிறார்கள். மோடி தலைமையிலான அரசு ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மரபுகளை மறந்து முன்னாள் குடியரசுத் தலைவரையும் அந்தக் குழுவில் இடம்பெற செய்துள்ளனர்.
இதையும் படிக்க: உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சை கோயிலை சேர்க்கப் பரிந்துரை!
சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2-3 மாதங்களில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுமானால் நாம் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஹிமாசல் மற்றும் கர்நாடக தேர்தல் முடிவுகளே அதற்கு மிகச் சிறந்த சான்று. நமது தனிப்பட்ட விருப்பங்களை புறந்தள்ளி கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசு ஏழை மக்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை. அவர்களை வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதையே நமது நோக்கமாக கொள்ள வேண்டும். இந்த சர்வாதிகார அரசை நீக்கி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.