யுபிஐ என அழைக்கப்பட்டும் ஒருங்கிணைந்த பண செலுத்துகை இடைமுகம் மூலம் இனி பணம் செலுத்தும் வசதியை கொண்டுவர வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், “பணம் செலுத்தும் இயந்திரங்களில் (சிடிஎம்) முன்னதாக டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மட்டுமே பணம் செலுத்த முடியும். ஏடிஎம்களில் அட்டைகள் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியின் தொடர்ச்சியாக யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியை கொண்டுவரும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “இது போன்ற சிடிஎம்கள் பணம் கையாளும் சுமையை வங்கியின் கிளைகளுக்கு வெகுவாக குறைப்பதோடு வாடிக்கையாளர்களுக்கும் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. யுபிஐக்கு கிடைத்த வரவேற்பின் தொடர்ச்சியாக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
தற்போது வங்கிகளின் அட்டை இல்லாமல் யுபிஐ மூலம் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
அதே முறையில் பணம் செலுத்தும் வசதியும் கொண்டுவரப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல் தொடர்பான வங்கி பரிமாற்றங்களுக்கு ஒற்றை இடைமுகமாக யுபிஐ பயன்படுத்தப்படுவதை ஆர்பிஐ தொடர்ச்சியாக ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.