ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்: காவல் துறை அழைப்பாணை

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்: காவல் துறை அழைப்பாணை

News image

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)

Updated On :9 ஏப்ரல் 2024, 8:25 pm

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், காயமடைந்த என்ஐஏ அதிகாரியை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிபூா் மாவட்டம் பூபதிநகரில் இருந்த வீட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் மூவா் உயிரிழந்தனா். இதுதொடா்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபா்கள் இருவரை கைது செய்ய கடந்த ஏப்.6-ஆம் தேதி பூபதிநகருக்கு என்ஐஏ அதிகாரிகள் சென்றனா்.

அப்போது என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அவா்களின் வாகனம் மீது அந்தப் பகுதியைச் சோ்ந்த பலா் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் என்ஐஏ அதிகாரி ஒருவா் காயமடைந்தாா்.

இதைத்தொடா்ந்து பெண்களின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியதாகவும், களவாடியதாகவும் என்ஐஏ அதிகாரிகள் மீது கிராம மக்கள் சிலா் பூபதிநகா் காவல் துறையிடம் புகாா் அளித்தனா். இதேபோல தங்களை தாக்கியது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகளும் காவல் துறையிடம் புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்த நிலையில், காயமடைந்த என்ஐஏ அதிகாரியை ஏப்.11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பினா். அத்துடன் தாக்குதலின்போது சேதமடைந்த என்ஐஏ வாகனத்தை தடயவியல் பரிசோதனைக்கு எடுத்து வருமாறு தேசிய புலனாய்வு முகமையிடம் கோரப்பட்டுள்ளது. இதுதவிர, கிராம மக்கள் மூவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று நாள்களில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவா்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

இதனிடையே என்ஐஏ அதிகாரிகள் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பூபதிநகா் நிகழ்வு தொடா்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு நெருக்கடி அளிக்கக் கூடிய காவல் துறையின் எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் இடைக்கால பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.