மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பிகார் மாநில முன்னாள் துணைத் தலைவர் தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிட்டதாக பாஜகவினர் எழுப்பிய விவகாரம் தற்போது காரசார வாதத்துக்குள் வந்துள்ளது.
சநாதனத்தின் மகன் என்று சொல்லிக்கொள்வார்கள், ஆனால், அதன் விதிகளை ஏற்க மாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிட்டது குறித்து பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் தேஜஸ்வி, தான் பாஜக தலைவர்களின் மூளை செயல் திறனை பரிசோதனைக்கு உள்படுத்தியதாகப் பதிவிட்டுள்ளார்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, தேஜஸ்வி யாதவ், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இன்று மதிய உணவுக்கு முகேஷ் மீன் கொண்டுவந்துள்ளார் என்று விடியோ பகிர்ந்திருந்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இருப்பதால் வெறும் 10 நிமிடம்தான் உணவு இடைவேளை அதற்குள் சாப்பிட வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த விடியோ வைரலாகியிருந்த நிலையில், பிகார் துணை முதல்வர் விஜய் சின்ஹா, அந்த விடியோ குறித்து கருத்துப் பதிவிட்டிருந்தார். அதில், சிலர், தங்களை சநாதனப் பிள்ளைகள் என்பார்கள். ஆனால் அதற்கு மதிப்பளிக்க மாட்டார்கள். நவராத்திரி நேரத்தில், யாராவது மீன் சாப்பிடும் விடியோவை பதிவார்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அரசியலைத் தாண்டி, ஒருவர் தனது மதத்தின், நாட்டின், சமூகத்தின் மதிப்புகளை நினைத்துப் பெருமைகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சர்ச்சைக்கு பதிலளித்த தேஜஸ்வி, “எல்லோரும் தெளிவாக இருக்க வேண்டிய ஒரு விஷயம், கடந்த மூன்று நான்கு நாள்களாக, நான் முகேஷ் சாஹ்னியுடன் தொடர்ந்து சுற்றி வருகிறேன். பிஜேபி தலைவர்களின் அறிவுத்திறனை டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை இங்கே பதிவிட்டேன்.
நான் விடியோவில் பதிவிட்டது ஏப்ரல் 8 தேதி நடந்தது பற்றித்தான். அவர்களுக்கு அறிவு இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழ்மை போன்று நாட்டில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள்.. பாஜகவினரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொள்வதற்கான சோதனைதான் இது என்று பதிவிட்டுள்ளார்.