திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவை சிபிஐ காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் கவிதா.
நீதிமன்றக் காவலில் உள்ள கவிதாவிடம் திகார் சிறையில் வைத்து கடந்த வாரம் சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் திகார் சிறையில் உள்ள கவிதாவை கைது செய்வதாக சிபிஐ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, தில்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது.
அண்மையில் கவிதாவை கைது செய்த அமலாக்கத் துறை, தில்லி முதல்வா் கேஜரிவாலையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட கவிதாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி அனுமதி அளித்தது.
இதற்கிடையே கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த 9-ஆம் தேதி இரண்டாவது முறையாக அவருக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்தது.