சுங்கத்துறை அதிகாரிகள் பேரில் மோசடி: ரூ. 2.24 கோடியை இழந்த ஐடி ஊழியர்!

ஐடி ஊழியர் ரூ.2.24 கோடி இழப்பு: சுங்கத்துறை மோசடியின் புதிய வடிவம்
சுங்கத்துறை அதிகாரிகள் பேரில் மோசடி: ரூ. 2.24 கோடியை இழந்த ஐடி ஊழியர்!

52 வயதான பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவரிடம் ரூ.2.24 கோடி ரூபாயை இணையவழி பண மோசடி கும்பல் பறித்துள்ளதாக வியாழக்கிழமை காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த பண மோசடி கும்பல் தில்லியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் போலவும் போதை தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் போலவும் பேசி ஏமாற்றியுள்ளனர்.

இதே போலான மோசடியில் 29 வயதான பெண் வழக்குரைஞர் சில நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டு ரூ.14.57 லட்சத்தை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மென்பொறியாளரான குமாரசாமி சிவகுமாரை பணமோசடி கும்பல் மார்ச் 18 முதல் 27-ம் தேதிக்குள் போன் மூலமாக அழைத்துள்ளனர்.

தில்லி சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக குறிப்பிட்ட மோசடிக்காரர்கள், அவர் பெயரில் தில்லியில் இருந்து மலேசியா செல்லும் விமான பார்சலில் 16 கடவுச்சீட்டுகள், 58 வங்கி அட்டைகள் மற்றும் 140 கிராம் போதை மருந்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த அழைப்பு போதை தடுப்பு பிரிவில் இருந்து பேசுவதாக வந்துள்ளது. அவர்கள் ஸ்கைப் விடியோ அழைப்புக்கு வருமாறு வலியுறுத்தி இதிலிருந்து வெளியே வர வேண்டுமானால் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

ஆர்டிஜிஎஸ் மற்றும் ஐஎம்பிஎஸ் மூலம் வெவ்வேறு தவணைகளில் ஐடி ஊழியர் ரூ.2.24 கோடியை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 5-ம் தேதி வரை தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடகிழக்கு சைபர் காவல் நிலையத்தில் மட்டும் இதே போலான 25 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com