கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சியையே இன்னும் எத்தனை நாள்களுக்குக் குற்றம்சொல்வீர்கள்? நீங்கள் என்னதான் செய்தீர்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ராம்நகரில் சனிக்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரியங்க காந்தி, இன்னும் எத்தனை காலத்துக்கு காங்கிரஸ் கட்சியையே குறை சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியிலேயே இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சியில் இருந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
1950ஆம் ஆண்டுகளிலேயே ஜவகர்லால் நேரு எடுத்த முன் முயற்சிகளால்தான் ஐஐடி, ஐஐஎம், ஏஐஐஎம் போன்றவை உருவாகியுள்ளன.
ஆனால், நீங்கள் இந்த 10 ஆண்டுகளில் என்னதான் செய்தீர்கள்? அவர்கள் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்று குற்றம்சொல்கிறார்கள். ஒருவேளை எதையும் செய்யவில்லை என்றால், உத்தரகண்ட் எப்படி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது? எங்கிருந்து வந்தன ஐஐடி, ஐஐஎம்கள்? சந்திரயானுக்கு விதை விதைத்தது யார்? ஜவகர்லால் நேரு, 1950ஆம் ஆண்டுகளில் எடுத்த பல முன்முயற்சிகள்தான் இவை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது அவர்கள் சிலிண்டர் விலையைக் குறைப்பதாக சொல்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் சிலிண்டருக்கு ரூ.1200 வரை கொடுக்கவில்லையா? அப்போது நாட்டை யார் ஆண்டது, அது பாஜக இல்லையா, பிரதமர் மோடி இல்லையா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.