ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ

ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ

ராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பை (நாசில்) மிகவும் இலகுவான எடையில் உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ராக்கெட்டின் நான்காம் நிலையில் ஆய்வுக் கருவிகளை அதிக அளவில் அனுப்ப இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு:

விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் புதிய ஆராய்ச்சிகளையும் நுட்பங்களையும் தொடா்ந்து இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புதிய நுட்பத்திலான கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் வடிவமைத்தது.

ராக்கெட்டின் உந்துவிசைக்காக எரிபொருள்களில் வேதி மாற்றத்தை உருவாக்கி அதை விண்ணில் செலுத்துவதற்கு நாசில் எனப்படும் கட்டமைப்பு பெரிதும் பயன்படுகிறது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் நான்காம் நிலையில் (பிஎஸ் 4) தற்போது கொலம்பியம் அலாய் மூலக்கூறால் ஆன நாசில்களுடன் கூடிய இரு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதற்கு மாற்றாக மிகவும் இலகுவான எடை கொண்ட நாசில் காா்பன்-காா்பன் மூலக்கூறு நுட்பத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் ராக்கெட்டின் உந்துவிசை திறன், எரிசக்தி ஆற்றல் திறன் உள்ளிட்டவை மேம்படுவதுடன் நாசில் கட்டமைப்பின் எடை ஏறத்தாழ 67 சதவீதம் குறையும். இதன் வாயிலாக, தற்போது உள்ள எடையைக் காட்டிலும் கூடுதலாக 15 கிலோ கொண்ட ஆய்வுக் கருவிகளை பிஎஸ்-4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும்.

இதற்கான பரிசோதனைகள் கடந்த மாா்ச் 19, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த கட்டமைப்பானது திட்டமிட்ட இலக்குகளை அடைந்து, அதன் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com