வாட்ஸ்ஆப், தனது பயனர்களின் வசதிக்காக, தொடர்ந்து புதுப் புது சேவைகளைக் கொண்டு வருவதில் அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்று பெயரெடுத்து வருகிறது.
அதில் ஒரு புதிய வசதியாக, இன்டெர்நெட் இல்லையென்றாலும் வாட்ஸ்ஆப் மூலம் புகைப்படங்களை அனுப்பும் வசதி வரவிருக்கிறதாம்.
வாரந்தோறும் என்று சொல்வதைக் காட்டிலும் நாள்தோறும் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் வாட்ஸ்ஆப்பில் வந்துகொண்டேதானிருக்கும். பயனர்கள் வேண்டுமென்றால் புதிய அப்டேட்களை கண்டுகொள்ளாமலிருக்கலாம்.
ஆனால் பயனர்களுக்கு இது தேவைப்படுமோ, இப்படி இருக்கலாமோ என்று யோசித்து யோசித்து புதிய புதிய உக்திகளைக் கொண்டு வந்துகொண்டேதானிருக்கும். அதில் புதிதாக வரவிருப்பது அதாவது ஆஃப்லைனில் இருந்தாலும் புகைப்படங்களை பகிரும் வசதிதான்.
ப்ளூடூத் வழியாக, அருகில் இருக்கும் டிவைசஸை ஸ்கேன் செய்து அதன் மூலம் புகைப்படங்களை அனுப்ப அனுமதி அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படவிருக்கிறதாம்.
அதாவது, இந்த சேவையானது, இதுவரை ஷேர் செயலிகளில் செயல்பட்ட தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் பரிமாறப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, பயனரிடம் இன்டெர்நெட் இல்லாவிட்டாலும், இந்த புதிய வசதியை வைத்து அவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்ளலாம். விரைவில்இது புகைப்படம், விடியோ, இசை, ஆவணங்கள், கோப்புகள் என எதையும் பகிரும் வகையில் கொண்டுவரப்படவிருக்கிறது.
இந்த வசதியும், இரு தரப்பினரும் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் வகையிலும், இதில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படாத வகையில்தான் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதாம்.
இது குறித்து வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், இது அருகிலிருக்கும் செல்போன்களுக்கு மட்டுமே பகிர முடியும். ஆன்டிராய்டு வசதிகொண்ட செல்போன்களில் முதல்கட்டமாக சோதிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த வசதி வேண்டுமென்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.