கண்ணூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர அரசியல்வாதி அல்ல என்பதே மக்களின் எண்ணமாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பிரசாரத்தின்போது புலனாய்வு அமைப்புகள் பினராயி விஜயன் மீதான முறைகேடு புகாரை விசாரிக்கவில்லை என ராகுல் கூறியிருந்தார்.
இதனிடையே இது குறித்து கேரள மாநிலம் கண்ணூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினராயி விஜயன், நாட்டில் பல தீவிர அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் ராகுல் காந்தி இங்கு இருந்ததில்லை. நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி ஒரு தீவிர அரசியல்வாதி அல்ல என்ற எண்ணமே உள்ளது.
பொதுத்தேர்தலின்போது கேரளத்துக்கு வந்து புலனாய்வு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது அவரின் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.
ராகுல் வேறு கட்சி என்பதாலும் காங்கிரஸின் உள்விவகாரம் என்பதாலும் கருத்து தெரிவிக்காமல் இருந்தோம். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் கேரளத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் தனித்தனியே போட்டியிடுகிறது எனக் குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், சிறுபான்மையினருக்கு எதிரான வகுப்புவாத பேச்சு எனக் குறிப்பிட்டார்.