கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பரவலான ஆதரவு அலை வீசுவதாக பேசினார்.
கர்நாடகத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தெற்கு கர்நாடக மக்களவை தொகுதிகளில் கடந்த 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வடக்கு கர்நாடகத்தில் மீதமுள்ள மக்களவை தொகுதிகளில் மே-7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கர்நாடகத்தின் பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 28) நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”கர்நாடகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பரவலான ஆதரவு இருக்கிறது.
கரோனா தடுப்பூசிகள் தொடங்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரை அனைத்தையும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் விமர்சித்து கேள்வி கேட்டு, எல்லா வகையிலும் இந்தியாவை அவமதிக்கிறது காங்கிரஸ். இந்த விவகாரத்தில் காங்கிரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யாருடைய அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் இவ்வாறு செயல்படுகிறது?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான காங்கிரஸின் பொய்யான கருத்துக்களும் வதந்திகளும், நாட்டின் ஜனநாயகத்துக்கு அவமானம். இதற்காக காங்கிரஸ் கட்டாயம் மன்னிப்பு கோர வேண்டும்.
கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட நேஹா போன்ற மகள்களின் வாழ்க்கையை குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை, அவர்களின் வாழ்க்கைக்கு காங்கிரஸ் மதிப்பளிப்பதில்லை. காங்கிரஸின் அக்கறையெல்லாம் தங்களுடைய வாக்கு வங்கி மீதே.
மோடி அரசால் தடை செய்யப்பட்டுள்ள, நாட்டிற்கு எதிராக செயல்படும் பிஎஃப்ஐ(பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா) அமைப்பை, காங்கிரஸ் வாக்குகளை பெற பயன்படுத்தியது. அப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பை பாதுகாக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது, அதிலும் குறிப்பாக வெறும் ஒரேயொரு இடத்தில், வயநாட்டில் வெற்றி பெறுவதற்காக பிஎஃப்ஐ அமைப்பை பயன்படுத்தியது காங்கிரஸ்.
உலக அளவில் இந்தியா 'ஜனநாயகத்தின் தாய்' என்று அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் பெருமை. சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மக்களிடம் தன்னம்பிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இளவரசருக்கு(ராகுல் காந்திக்கு) நமது மன்னர்களின், மகாராஜாக்களின் பங்களிப்புகள் நினைவில் இல்லை. நவாபுகள், மன்னர்கள் மற்றும் சுல்தான்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசும் தைரியம் காங்கிரஸுக்கு இல்லை. நமது நாட்டின் நூற்றுக்கணக்கான கோயில்களை அழித்து, அவமானப்படுத்திய ஔரங்கசீப்பின் அட்டூழியங்களை காங்கிரசுக்கு நினைவில் இல்லை. நமது புனித இடங்களை அழித்ததும், பசுக்களை சூறையாடி கொன்றதும் காங்கிரஸுக்கு நினைவில் இல்லை. ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
நாட்டின் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், உங்கள் சொத்து, உடைமைகள், உங்களிடமுள்ள தங்கம், நகைகள், தாலியைக் கூட சல்லடை செய்து ஆராய முனைப்பு காட்டி வருகிறது காங்கிரஸ். உங்கள் வீடுகளை சோதனை செய்து உங்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் அபகரிக்கும் கேவலமான நடவடிக்கையை காங்கிரஸ் இலக்காகக் கொண்டுள்ளது.
உங்களின் சொத்துக்களை காங்கிரஸ் தனது வாக்கு வங்கிகளை(முஸ்லிம்கள்) சேர்ந்தோருக்கு மறுவிநியோகம் செய்ய திட்டமிட்டு செயலாற்றுகிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுப்பீர்களா? உங்களது தாலிக்கயிறுகளை காங்கிரஸ் அபகரிக்க அனுமதிக்கக்கூடாது. காங்கிரஸுக்கான எச்சரிக்கை இது” என்றார்.