ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் வெயிலையடுத்து 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இயங்காது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை காலை 7 மணி முதல் 11.30 மணி வரை செயல்படும். அதே வேளையில் பிரார்த்தனைக் கூட்டங்கள், விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகள் தவிர்க்கப்படும்.
வெப்ப அலையின் பாதகமான விளைவுகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முடிவு, அரசு, தனியார், உதவி பெறும் மற்றும் உதவி பெறாத அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இது குறித்து பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் உமா சங்கர் சிங் பிறப்பித்த உத்தரவில், அரசு, தனியார் உதவி பெறும், உதவி பெறாத பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது.
இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் அரசு உதவிபெறாத பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு இது பொருந்தாது. திட்டமிட்ட நேரத்தில் தினமும் பள்ளிக்கு வர வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு கோடை விடுமுறை குறித்து தனி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக செரைகேலாவில் 45.1 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதைத் தொடர்ந்து கோடா 44.6 டிகிரியும், ஜாம்ஷெட்பூரில் 44 டிகிரியும், டால்டோங்கஞ்ச் 43.8 டிகிரி செல்சியஸ் பதிவானது.
மாநில தலைநகர் ராஞ்சியில் அதிகபட்சமாக 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் 13 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது.