ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு
கொல்கத்தா: ஸ்ரீ சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷனின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி செவ்வாய்க்கிழமை காலமானாா்.
ப்ரவ்ராஜிகா ஆனந்தபிரணா மாதாஜி (98), ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவராக கடந்த ஆண்டு, ஜனவரி 14-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக, சாரதா மடத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண சேவா பிரதிஷ்டான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், மடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9:45 மணியளவில் அவா் காலமானாா். மாதாஜியின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சாரதா மடத்தின் தலைமையகத்தில் மாலை 6 மணி வரை வைக்கப்பட்டது.
பிரதமா் இரங்கல்:
ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமா் நரேந்திர மோடி, ‘ஸ்ரீ சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷனின் தலைவரான ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி, மக்களிடையே ஆன்மிக விழுமியங்களை விதைத்ததற்காகவும் சுகாதாரம், கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவா் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவாா். இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரின் எண்ணற்ற பக்தா்களுடன் உள்ளன. ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.