பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு புதன்கிழமை பதிலளித்துள்ளது.
அலோபதி மருத்துவம் குறித்து தவறான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று மீண்டும் நேரில் ஆஜராகியுள்ளார்.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த உத்தரகாண்ட் அரசின் மருந்து உரிமம் வழங்கும் ஆணையம், பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான திவ்யா மருந்தகத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் மீதும், அதன் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் மீது குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதேபோல், பதஞ்சலி நிறுவனத்தின் மீது தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி முன்பு நிபந்தனையற்ற மன்னிப்பையும் உத்தரகண்ட் அரசு கேட்டுள்ளது.
கடந்த முறை விசாரணையின்போது பதஞ்சலி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காததற்கு உத்தரகண்ட் அரசு மீது அதிருப்தி தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி, கடந்த பிப்.27-ஆம் தேதி பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இரண்டு முறை பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரியும், அதனை ஏற்காத உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா இன்று மூன்றாவது முறையாக நேரில் ஆஜராக கோரி விசாரணை நடத்தி வருகிறது.