
புது தில்லி: ரூ.1,200 கோடி பொருள் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம், தற்போது 120 ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட பக்கெட்டை நம்பியிருப்பதாக ஆம் ஆத்மி விமரிசித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், புது தில்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் நுழைவு வாயிலில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியிருக்கிறது. இந்த விடியோவை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அதுபோல, நாடாளுமன்ற கட்டடத்துக்குள் மழை நீர் ஒழுகுவதால், அதனை பிடிக்க நீல நிற பக்கெட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்திருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் அந்த விடியோவை பதிவிட்டு, ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடம் தற்போது 120 ரூபாயில் வாங்கிய பக்கெட்டை நம்பியே இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறது.
மேலும், நாடாளுமன்ற கட்டட நுழைவு வாயிலில், மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. காரில் வந்து இறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வெள்ளத்தைக் கடந்துதான் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்ற நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றக் கட்டடத்துக்கு எதிரே அமைந்துள்ள பிரஸ் கிளப் ஹவுஸ் கட்டடத்துக்குள் மழை நீர் நுழைந்து, குளம் போல காட்சியளிக்கும் விடியோக்களும் பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.