ஹசாரிபாக், பாட்னா தவிர நீட் தேர்வு முழுக்க முறைகேடு நடக்கவில்லை: உச்ச நீதிமன்றம்
ஹசாரிபாக், பாட்னா தவிர நீட் தேர்வு முழுக்க முறைகேடு நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் விளக்கம்.


புது தில்லி: நாட்டில் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிகளைச் தவிர முழுக்க முழுக்க நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் மறுதேர்வுக்கு உத்தரவிடவில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) முழுமையாக ரத்து செய்துவிட்டு, மறு தோ்வு நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அந்த உத்தரவுக்கான விளக்கத்தை இன்று அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவினால், நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, 23.33 லட்சம் போ் எழுதிய நீட் தோ்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்பதோடு, அந்த மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான பணிகள் நாடு முழுவதும் தொடங்கியிருக்கின்றன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வின்போது காலதாமதத்தைக் காரணம் காட்டி 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டது.
பின்னர், கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிகாா், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த மையங்களில் வினாத்தாள் கசிவு, உத்தர பிரதேச தோ்வு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம், கருணை மதிப்பெண் என்ற பெயரில் குறிப்பிட்ட சில தோ்வா்களுக்கு தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) கூடுதல் மதிப்பெண் வழங்கியது என நிகழாண்டு நீட் தேர்வு பல்வேறு சா்ச்சைகளில் சிக்கியிருந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.
இது குறித்து இன்று விளக்கம் அளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், மாணவர்களின் நலனுக்கு ஒத்துவராத வேலைகளில் ஈடுபடுவதை தேசிய தேர்வு முகமை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.
ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்களைக் கொடுத்த தேசிய தேர்வு முகமையால், 44 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுக்க முடிந்திருப்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அதாவது, நீட் தோ்வில் இடம்பெற்ற அணு மற்றும் அதன் தன்மைகள் தொடா்பான கேள்விக்கு, வினாத்தாளில் இரண்டு சரியான விடைகள் இடம்பெற்றிருந்தாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘வினாத்தாளில் அந்தக் கேள்விக்கு ஒரே ஒரு சரியான விடையே இடம்பெற்றிருந்தது; இரண்டு விடைகள் இடம்பெறவில்லை’ என்ற தில்லி ஐஐடி நிபுணா் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடையின் அடிப்படையில், நீட் தோ்வு முடிவை என்டிஏ மறுமதிப்பீடு செய்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்நிலை நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
எதிர்காலத்தில், நீட் தேர்வில் முறைகேடு இல்லாமல் நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்த குழு ஆய்வு செய்யும் என்று கூறப்படுள்ளது. இந்தக் குழுவின் இறுதி அறிக்கை செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட வேண்டும், இந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய கல்வித்துறை தொடங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...