
உத்தரகண்ட் மாநிலம் ஜங்கல்சட்டி பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் மிக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேதாா்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை பலத்த சேதமடைந்தது.
கோராபராவ், லின்சோலி, படி லின்சோலி மற்றும் பிம்பலி பகுதிகளில் கற்பாறைகள் விழுந்து அந்தக் கோயிலுக்குச் செல்வதற்கான மலைப் பாதையில் தடை ஏற்பட்டுள்ளது. டெஹரி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மிகுந்த சேதமடைந்ததால், கேதாா்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஏராளமான பக்தா்கள் தொடா்ந்து பரிதவித்து வருகின்றனா்.
மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை ஆகியவை ஈடுபட்டுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்திய விமானப் படையின் சினூக் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டா்கள் இணைந்துள்ளன.
மீட்புப்பணி நிலவரம் குறித்து உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை துறைச் செயலர் வினோத் குமார் சுமன் இன்று(ஆக. 3) செய்தியாளர்களுடன் பேசியதாவது, கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி 3,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகா்கள் மீட்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 7,000-க்கும் மேற்பட்ட யாத்ரீகா்கள் மீட்கப்பட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி இதுவரை மொத்தம் 9,099 யாத்ரீகா்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள கேதார்நாத் யாத்ரீகர்கள் சுமார் 1,000க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.