
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், முண்டகை, சூரல் மலையில் பாதிப்புகளை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே பிரதான பணி. மாயமானவர்கள் தொடர்பான விபரங்கள் சரியாக இன்னும் கிடைக்கவில்லை. தேடுதல், மீட்பு பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவை என கேரள அரசு கேட்டால், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கையின் பின்னணியில் உள்ள சட்டபூர்வமான தன்மையை மத்திய அரசு ஆய்வு செய்யும். பேரிடர் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு புரிந்துகொண்ட அனைத்தையும் மத்திய அரசின் முன் வைப்பேன் என்றார். வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மண்ணில் புதையுண்டவா்களைத் தேடும் பணியிலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். மீட்கும் பணிகள் இன்று(ஆக. 4) 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது. எனவே வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.