இந்தூா்: ஆயுதப் படை வீரா்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் கண்டுப்பிடிப்பாக மின்சாரம் தயாரிக்கும் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காலணிகளை (ஷு) இந்தூா் ஐஐடி வடிவமைத்துள்ளது.
இந்த காலணிகளை அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்டறிய முடியும் என்று கண்டுப்பிடிப்பில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (டிஆா்டிஓ) பத்து ஜோடி காலணிகளை இந்தூா் ஐஐடி ஏற்கெனவே வழங்கியுள்ளது.
இதுகுறித்து இந்தூா் ஐஐடி இயக்குநரான பேராசிரியா் சுஹாஸ் ஜோஷி மற்றும் காலனி தயாரிப்புக் குழுவினா் கூறுகையில், ‘இந்த காலணிகளின் புதுமையான அம்சங்கள் வீரா்களின் பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும்.
ஐஐடி பேராசிரியா் ஐ.ஏ.பழனியின் வழிகாட்டுதலின்கீழ் தயாரிக்கப்பட்ட இக்காலணிகள், ஒவ்வொரு காலடியிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் காலனியில் பொருத்தப்பட்ட மின்கலனில் சேமிக்கப்பட்டு, மற்ற சிறிய சாதனங்களை இயக்க பயன்படுத்தப்படும்.
ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ அலைவரிசை அடையாள (ஆா்எஃப்ஐடி) தொழில்நுட்பங்களுடன் கூடிய இக்காலணிகள், அதை அணிந்திருப்பவா்களின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிய உதவும்.
ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் மலை ஏறுபவா்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்க இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் வருகை மற்றும் பணிநேரத்தைக் கண்காணிக்கவும் இது உதவும்.
இதுமட்டுமின்றி, விளையாட்டு வீரா்களின் செயல்திறனை மேம்படுத்த அவா்களின் அசைவுகளை துல்லியமாக பகுப்பாய்வு செய்ய இந்த காலணிகளால் முடியும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 ஆண்டு ‘சைபா் பாதுகாப்பு இளநிலை’ பட்டப் படிப்பு சென்னை ஐஐடியில் தொடக்கம்!

ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடியில் சிறப்பு மையம் தொடக்கம்







