
ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்த கனமழை, நிலச்சரிவு காரணமாக 120-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கனமழை கொட்டுத்தீர்த்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் ஹிமாசலில் பெய்த கனமழையையடுத்து அங்கு மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில்,
இன்று (ஆகஸ்ட் 10) தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆகஸ்ட் 16 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் நஹன்(சிர்மௌர்)யில் 168.3 மிமீ மழையும், அதைத்தொடர்ந்து சந்தோலில் 106.4 மி.மீ, நக்ரோட்டா சூரியனில் 93.2 மி.மீ, ஜப்பர்ஹட்டியில் 53.2 மீமீ, கந்தகஹட்டியில் 45.6 மி.மீ மழையும் பெய்துள்ளது.
கனமழை காரணமாக 44 மின்சாரம் மற்றும் 67 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை மண்டி, சிர்மூர், சிம்லா மற்றும் குலு மாவட்டங்களின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதால் பயிர் நிலங்கள் மற்றும் குடிசை வீடுகள் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 9 வரை மாநிலத்திற்கு சுமார் ரூ.842 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.