
மணிப்பூர் முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹௌகிப்பின் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில், அவரது மனைவி உயிரிழந்தார்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எகோ முலாம் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹௌகிப் வசித்து வந்துள்ளார். இந்தப் பகுதிகளில் குக்கி என்ற இனத்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது மனைவி சாருபாலா ஹௌகிப், ஆக. 10, சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்த குப்பைகளை எரிக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில், குப்பைகளின் உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், சாருபாலா பலத்த காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, சாருபாலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, சாருபாலா இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.
இருப்பினும், வெடிகுண்டு வெடித்த சமயத்தில், யம்தோங்கும் அவரது மகளும் வீட்டிலிருந்தும், வெடிவிபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து விட்டனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவமானது யம்தோங்குக்கும் அவரது உறவினருக்கும் இடையேயான விரோதத்தால் ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் அல்லது வேறு யாரும் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
யம்தோங் ஹௌகிப், மணிப்பூரின் சைகுல் தொகுதியில் இருமுறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து, பின்னர் 2022ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.
கூடுதல் தகவல்களாக, மணிப்பூரின் டெங்னௌபால் மாவட்டத்தில், ஆக. 9, வெள்ளிக்கிழமை, ஐக்கிய குக்கி விடுதலை முன்னணி அமைப்பினருக்கும், குக்கி கிராம தன்னார்வலர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்தத் தாக்குதலில் குக்கி அமைப்பைச் சேர்ந்த ஒருவரும், தன்னார்வலர்களில் இருவரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐக்கிய குக்கி விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரின் இல்லத்திற்கு, கிராமத் தன்னார்வலர்கள் தீ வைத்துள்ளனர்.
இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.