
முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து ராஜிநாமா செய்த கல்லூரியின் முதல்வர் மற்றொரு கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியது.
கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவி வலுவடைந்துள்ளது.
ஆர் ஜி கார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இளநிலை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்ய 12 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்த நிலையில், நேற்று காலை அவர் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பதவியை ராஜிநாமா செய்து 24 மணிநேரத்தில் கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வராக சந்தீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரிக்கு இன்று காலை வருகை தந்த சந்தீப் கோஷை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் ஜாவேத் அகமது கானிடம், ஆர் ஜி கார் மருத்துவக் கல்லூரியில் நடந்ததை போன்று மற்றொரு சம்பவம் இந்த கல்லூரியிலும் நடக்க விடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
சந்தீப் கோஷ் மீண்டும் மற்றொரு கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தற்போது போராட்டம் வெடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.