பிகார் அமைச்சரவைக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஏப். 14) நடத்த அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் தீர்மானித்துள்ளார். இக்கூட்டத்துக்குப் பிறகு அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார் சட்டப் பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து மாநில முதல்வராக நிதீஷ்குமார் 10-ஆவது முறையாகப் பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் நிதீஷ்குமார் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இத்தேர்தலில் அவர் கடந்த வாரம் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றார். அவர் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்றும் பாஜகவைச் சேர்ந்த ஒரு தலைவர் புதிய முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் ஊகங்கள் வெளியாகின.
இந்நிலையில், பிகார் அமைச்சரவைக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஏப். 14) நடத்த நிதீஷ்குமார் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கேபினட் செயலகத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி அன்று பகல் 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிதீஷ்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுமர் சையது அடா ஹஸ்னைனிடம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நிதீஷ்குமாரின் நெருங்கிய சகாவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவருமான சஞ்சய் ஜா, செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஏப். 13}ஆம் தேதிக்குப் பிறகு புதிய அரசை அமைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கும்' என்று தெரிவித்தார்.
இதனிடையே, பிகாரில் முதன்முறையாக முதல்வர் பதவியைப் பெற உள்ள பாஜக, ஆட்சி மாற்றத்துக்கான தன் கட்சியின் மத்திய பார்வையாளராக மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌஹானை நியமித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமையகம் புது தில்லியில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "பிகார் பாஜக சட்டப் பேரவை கட்சித் தலைவரை (முதல்வர்) தேர்வு செய்யும் நடைமுறைக்கு மத்திய பார்வையாளராக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானை கட்சியின் ஆட்சிமன்றக் குழு நியமித்துள்ளது' என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பிகார் மாநில சட்டப் பேரவை விவகாரத் துறை அமைச்சருமான விஜய்குமார் சௌதரி கூறுகையில் "பாஜகவின் பரிந்துரையை ஏற்று பிகாரின் புதிய முதல்வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்வு செய்யும். இந்த விவகாரத்தில் பாஜக முக்கியப் பங்காற்றும்' என்று தெரிவித்தார்.
புதிய முதல்வராக தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சௌதரி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் உலா வருகின்றன. பிகாரைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பலரும் அண்மைக்காலமாக தொடர்ந்து தில்லிக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்பது தொடர்பாக அவர்கள் ரகசியம் காத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிகார் அமைச்சரும் மாநில பாஜக முன்னாள் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால் கூறுகையில் "அடுத்த முதல்வர் யார் என்பதை எங்கள் கட்சியின் மத்தியத் தலைமை முடிவு செய்யும். முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை' என்று தெரிவித்தார்.
புதிய முதல்வர் பதவிக்கு சாம்ராட் சௌதரியைத் தவிர, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், பிகார் அமைச்சர்களான லாகேந்திர பாஸ்வான், ஸ்ரேயசி சிங் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!

எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?

எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


