மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 75,000 இடங்கள்: மோடி
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 75,000 இடங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11ஆவது முறையாக தேசியக் கொடியை வியாழக்கிழமை காலை ஏற்றினார்.
தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, “வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புக்காக இந்திய மாணவர்கள் கோடிக்கணக்கில் செலவிடுவதால், அவர்களின் நலனுக்காக புதிதாக 75,000 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உருவாக்கப்படும். நமது நாட்டிலேயே சிறப்பான கல்வி வழங்கப்படுவதால் மாணவர்கள் வெளிநாடு செல்ல தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், மோடி பேசியதாவது:
“மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 10 கோடி பெண்கள் சுதந்திரம் அடைந்துள்ளனர். நாட்டில் விண்வெளித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ’ஸ்டார்ட் அப்’கள் வந்துள்ளன. தனியாரின் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன.
நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எளிதாக வாழ்வதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
புதிய குற்றவியல் சட்டங்களில் தண்டனையைவிட நீதி கிடைப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். 2047இல் வளர்ச்சி அடைய நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறையை எளிதாக்க நவீனமயமாக்குவதற்கு அனைத்து தரப்பு அரசு துறைகளும் உழைக்க வேண்டும்.
அனைவருக்கும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவை செய்து நாட்டை வளர்ச்சியின் உயரத்துக்கு கொண்டு செல்வதே மூன்றாவது முறையாக அமைக்கப்பட்டுள்ள அரசின் பணியாக உள்ளது.
இந்தியா 5ஜி சேவையை வேகமாக வழங்கி வருகின்றது, அத்துடன் நின்றுவிடாமல் 6ஜி சேவையை உருவாக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.