
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 6 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தில்லியிலுள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜெபி நட்டா, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலிகள். நாட்டை முன்னேற்றியதில் அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக மக்களால் நினைவுகூரப்படுகிறார். மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இந்தியாவுக்கான அவருடைய தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறந்த தினத்தில் அவரை நினைவுகூர்கிறேன். அவர் தொலைநோக்கு கொண்ட அரசியல்வாதி, மனிதநேயமிக்கவர், சிறந்த தலைவர். அனைத்திற்கும் மேலாக, இதயத்தில் ஒரு கவிஞர், அவர் இந்தியாவின் முன்னேற்றத்தை அசைக்கமுடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்தினார்.
இந்திய நாட்டிற்காக தன்னலமற்ற சேவை செய்த அவரது செயல் என்றென்றும் ஊக்கமளிக்கும். இந்த மரபு வரும் தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும். நன்றியுள்ள நாடு என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.