நீதிபதி எஸ்.கே.யாதவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், 'இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது' என்று பேசியிருந்தார். இவர் பேசிய விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
நீதிபதியின் பேச்சுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். அதேபோல மாநிலங்களவையில் 55 எம்.பி.க்கள் சேர்ந்து நீதிபதி யாதவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்பட 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் முன்பாக ஆஜரான நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு, வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நீதிபதி யாதவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் பேசினார்.
யோகி ஆதித்யநாத் சில நாள்களுக்கு முன்பு, 'மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. யார் உண்மையைப் பேசினாலும் இவ்வாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்ய அழுத்தம் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசுகிறார்கள், அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை பாருங்கள்' என்று பேசியிருந்தார்.
இதையடுத்து, நீதிபதி எஸ்.கே.யாதவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

தீ விபத்து மீட்புப் பணிகள் தாமதம்: அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி வலியுறுத்தல்

சேலம் மத்திய சிறையில் நீதிபதி விசாரணையின்போது மதுபோதையில் இருந்த வாா்டன் பணியிடை நீக்கம்







