சம்பல் ஜாமா மசூதி அருகேயுள்ள கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!

உ.பி.யில் கலவரம் ஏற்பட்ட ஜாமா மசூதி அருகேயுள்ள கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்கி விஷ்ணு கோவிலில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்.
கல்கி விஷ்ணு கோவிலில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர். PTI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள கல்கி விஷ்ணு கோவிலில் இந்தியத் தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

உ.பி. சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோவில் சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு டிச. 13 அன்று மீண்டும் பூஜை செய்து திறக்கப்பட்டது. கக்கு சராய் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவில் ஆய்வின் மூலம் மீண்டும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள கல்கி விஷ்ணு கோவிலில் இந்தியத் தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு நடத்தினர். இந்தக் கோவில் கடந்த மாதம் கலவரம் ஏற்பட்ட முகாலயர் காலத்தைச் சேர்ந்த ஜாமா மசூதி இருக்கும் பகுதிக்கு 1 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது.

இந்தக் கோவில் குறித்துப் பேசிய அர்ச்சகர் மகேந்திர பிரசாத் வர்மா, “இந்தக் கோவிலில் ஒரு கிணறு உள்ளது. அதில் தண்ணீர் இல்லை. ஆனால், அந்தக் கிணறு மூடப்படவில்லை. ஸ்கந்த புராணத்தில் சம்பலில் உள்ள மற்ற புனிதத் தலங்களுடன் இந்தக் கிணறு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலின் பழைய எல்லை வளாகத்துக்குள் இந்தக் கிணறு அமைந்துள்ளது” என்று கூறினார்.

தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வு குறித்துப் பேசிய சம்பல் துணை ஆட்சியர் வந்தனா மிஸ்ரா, “கல்கி விஷ்ணு கோவிலில் உள்ள பழமையான கிணறு குறித்து தொல்லியல் துறைனர் இன்று ஆய்வு செய்தனர். அந்தக் கிணற்றின் காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆய்வுக் குழுவினர் 15 நிமிடங்கள் இங்கு ஆய்வு செய்து பின்னர் கோவிலைப் பார்வையிட்டனர்” என்று தெரிவித்தார்.

நேற்று (டிச. 20) தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் 4 பேர் சமீபத்தில் கண்டறியப்பட்ட ஸ்ரீ கார்த்திக் மகாதேவ் கோவில் உள்பட பழமையான 19 கிணறுகள் மற்றும் ஐந்து புனிதத் தலங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

மத வழிபாட்டு தலங்களை, குறிப்பாக மசூதிகள் மற்றும் தர்காக்களை மீட்பதற்காகப் தொடரப்பட்ட வழக்குகளில் இடைக்கால மற்றும் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், புதிய வழக்குகளைத் தொடரவும் உச்சநீதிமன்றம் கடந்த டிச. 12 அன்று தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com