
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக டிசம்பர் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறியிருந்தார்.
இதன்தொடர்ச்சியாக, உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
அம்பேத்கர் குறித்துப் பேசிய அமித் ஷா, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக டிசம்பர் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
முன்னதாக 'நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை, மனித உரிமைகளுக்காக மனிதநேய, பொதுநலமிக்க அரசியலமைப்பை உருவாக்கியவர் அம்பேத்கர். அவரை கடவுளைப் போலவே மக்கள் நினைக்கின்றனர். அமித் ஷாவின் பேச்சு மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அமித் ஷா தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.