புது தில்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு அத்வானிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்.கே. அத்வானியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்றும் மோடி கூறியுள்ளார்.
அடிமட்ட தொண்டன் முதல் துணை பிரதமர் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றி நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார். உள்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்று பிரதமர் மோடி, அத்வானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிக்க.. நடிகை பூனம் பாண்டே உயிருடன்தான் இருக்கிறார்
நாடாளுமன்றத்தில் அவரது விவாதங்கள் எப்பொழுதும் முன்னுதாரணமாக இருக்கும். மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (96) இந்த விருது வழங்கப்படும் தகவலை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் கூறினார்.
90ஆம் ஆண்டுகளில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசாக முதல்முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, கட்சியின் எழுச்சியை வடிவமைத்த பெருமைக்குரிய மற்றும் பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக இருந்தவர் எல்.கே. அத்வானி என்றும் மோடி தெரிவித்துள்ளார்.