ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார்.
சந்திரபாபு நாயுடுவின் இல்லம் அமைந்துள்ள அமராவதிக்கு நேரில் சென்ற பவன் கல்யாணுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால், இது மற்ற கட்சிகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜன சேனா கட்சிக்கான தொகுதிகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்பில் தொகுதிகளில் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போட்டியிடும் தொகுதிகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.