சண்டீகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடண்டஹ் ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச் சீட்டில் தேர்தல் நடத்தும் அதிகாரி எழுதும் காணொலிகளும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இதுதான் தேர்தலை நடத்தும் முறையா? இதுதான் தேர்தல் நடத்தும் அதிகாரியில் செயலா?. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து. ஜனநாயகத்தின் படுகொலை.” எனத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் வாக்குச்சீட்டுகள், காணொலிகள் மற்றும் இதர கோப்புகளை சரிபார்க்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சண்டீகர் மாநகராட்சியின் அனைத்து கூட்டத்துக்கும் தடை விதித்து வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.