மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறையினா் கைது செய்து கடந்தாண்டு சிறையில் அடைத்தனா்.
கடந்த மாதத்துடன் சஞ்சய் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி தரப்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் முறையிட்ட சஞ்சய் சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றக் காவலிலேயே பிப்.5-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு உரிமைக் குழுவில் விசாரணைக்கு உள்ளதால் பதவியேற்புக்கு அனுமதிக்க முடியாது என்று ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.