கர்நாடகத்தில் அரசு மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் திருமணத்திற்கு போட்டோசூட் (Photo shoot) நடத்திய மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தின் சித்ரா துர்கா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், அவரது திருமணத்திற்கு முந்தைய புகைப்படமெடுக்கும் நிகழ்வை (Pre Wedding Photo shoot) அரங்கேற்றியுள்ளார். அவரது மணப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நினைத்த அவர், அறுவைச் சிகிச்சைப் பிரிவில் போலி நோயாளி ஒருவருக்கு வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதுபோல் புகைப்படமெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரும், மணப்பெண்ணும் மருத்துவ உடையில் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காணொலி வலைதளத்தில் வைரலானது. அவர் அறுவைச் சிகிச்சை செய்வதுபோலவும், அதற்கு அந்தப் பெண் உதவி செய்வதுபோலவும், அவரது வியர்வையை துடைத்துவிடுவது போலவும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
இந்த சர்ச்சைக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதார அலுவலர், இந்த நிகழ்வு பயன்பாட்டில் இல்லாத அறுவைச் சிகிச்சை அறையில் நடைபெற்றதாகவும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இதையும் படிக்க: நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!
எனினும் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அந்த மருத்துவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். 'மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் அவர்கள் நலனை பேணிகாப்பதற்காகவும்தான் அரசு மருத்துவனைகள் இயங்குகின்றன. சொந்த வேலைகளை பார்த்துக்கொள்வதற்கு அல்ல!' என அவர் கூறினார்.
'மருத்துவர்கள் இதுபோன்ற ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது' எனவும் அவர் தெரிவித்தார்.
'மருத்துவர்கள் உள்பட அனைத்து ஒப்பந்த பணியாளர்களும் அரசுப் பணி விதிகளுக்கு உட்பட்டு தங்கள் கடமைகளைச் செய்யவேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் வசதிகள், சாமானிய மக்களின் நலன் காப்பதற்காக மட்டுமே' என அவர் கூறினார்.