வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதத்திற்கான சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நாளை(பிப்.13) தில்லி நோக்கி அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் அறிவித்துள்ள பேரணியால் தில்லி - தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-ஆவது பிரிவைப் பயன்படுத்தி தில்லி காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும், குண்ட்லி, காஸிப்பூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தில்லிக்குள் செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதே போன்று தில்லியின் அண்டை மாநிலங்களிலும் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளே மேற்கொண்டுள்ளனா். பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் ‘தில்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மேலும், தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் ஹரியாணாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவைகள் ரத்து செய்தல், குறுச்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.