மகாராஷ்டிரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களில் 40 பேரை தன் பக்கம் சேர்த்துக் கொண்ட அக்கட்சியின் முக்கியத் தலைவரான அஜித் பவார், கடந்த ஆண்டு ஜூலையில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இரு குழுவாக பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.
இந்நிலையில், சரத் பவார் தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 6-ஆம் தேதி அங்கீகரித்தது. மேலும், அகட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான ’கடிகாரம்’ அஜித் பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், சரத் பவார் அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் - சரத் சந்திர பவார்' என்றும் புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சரத் பவார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்பான வழக்கில், தங்களது தரப்பின் கலந்தாலோசிக்காமல் எவ்வித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே அஜித் பவார் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.