பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ஒடிசாவிலிருந்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
ஒடிசா சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மாநிலங்களவை தேர்தல் அதிகாரி அபனிகாந்த் பட்நாயக்கிடம் வைஷ்ணவ் தனது ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
ஆளும் பிஜேடி 2019-ம் ஆண்டு செய்ததைப் போலவே மாநிலங்களவை தேர்தலில் வைஷ்ணவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பதாக புதன்கிழமை அறிவித்தது.
ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் வைஷ்ணவ், பாஜக மாநிலத் தலைவர் மன்மோகன் சமால் மற்றும் 13 கட்சி எம்எல்ஏக்களுடன் தனது ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அமர் பட்நாயக் மற்றும் பிரசாந்த் நந்தா ஆகியோரின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.