கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேச எல்லையில் எல்லை தாண்டிய கடத்தல் முயற்சியை முறியடிக்கும் போது நபர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவரிடமிருந்து ரூ.6 கோடிக்கு மேல் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவமானது நாடியா மாவட்டத்தில் உள்ள ஹொரண்டிபூர் எல்லை கிராமப் பகுதியில் நடைபெற்றது. இப்பகுதியை எல்லைப் பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன்களால் பாதுகாக்கப்படுகின்ற நிலையில், சம்பவத்தன்று 10 கிலோவுக்கும் அதிகமான 16 தங்கக் கட்டிகள் உடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையானது சர்வதேச எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக மூத்த பி.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.6.70 கோடி மதிப்புள்ள தங்கம், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. எல்லை தாண்டிய குற்றங்களில் கடத்தல்காரர்கள் நேரடியாக ஈடுபடுவதில்லை என்றாலும், இந்த குற்றச் செயல்களைச் செய்ய ஏழை உள்ளூர் மக்களை குறிவைக்கின்றனர்.
எல்லை தாண்டிய குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சம்பவத்தையும் பி.எஸ்.எஃப் 'சீமா சதி' ஹெல்ப்லைன் எண் 14419 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.