எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: விவசாயிகள் வேண்டுகோள்

எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: விவசாயிகள் வேண்டுகோள்
-

மத்திய அரசு வைத்த முன்மொழிவுகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நிராகரித்த நிலையில், தங்களது கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் இது குறித்துப் பேசுகையில், எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வருமாறு மத்திய அரசை வலியுறத்தியிருக்கிறார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இல்லாவிட்டால், நாங்கள் புதன்கிழமை தில்லியை நோக்கிச் செல்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.

‘மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து கொள்வதாக உறுதியளித்த மத்திய அரசின் முன்மொழிவுகளை நிராகரிக்கிறோம்’ என விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தாளேவால் திங்கள்கிழமை தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 21-ஆம் தேதி தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா்.

பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையின் முடிவில், செய்தியாளா்களிடம் பேசிய மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம் மற்றும் இந்திய பருத்தி கழகத்தின் மூலம் பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்துள்ளோம்.

கொள்முதல் அளவுக்கு வரம்பு நிா்ணயிக்கவில்லை. இதற்கான வலைதளம் விரைவில் உருவாக்கப்படும். தோ்தல் முடிந்து, புதிய அரசு அமைந்த பிறகு மற்ற பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும்’ என்றாா்.

இந்நிலையில், சண்டீகரிலிருந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள சம்பு பகுதிக்குத் திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தாளேவால் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் முன்மொழிவுகள் குறித்து நடத்திய விவாதத்தின் முடிவில், அவை விவசாயிகள் நலன் சாா்ந்து அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனவே, இந்த முன்மொழிவுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றாா்.

மேலும், வரும் 21-ஆம் தேதி தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com