காதல் திருமணத்தையொட்டி நடந்த சலசலப்பில் மூவர் பலியாகியதாக உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் காவலர்கள் தெரிவித்தனர்.
ஃபுலாட் கிராமத்தில் காதல் திருமணத்தையொட்டி ஒரே சாதியைச் சேர்ந்த இரு தரப்புக்கிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
வாக்குவாதம் மோதலாக மாற துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு இரு தரப்பும் சண்டையிட்டனர்.
இந்தத் தாக்குதலில் பெண்ணின் காதலர் அன்கித் (25), ரோகித் (29) மற்றும் பெண்ணின் தந்தை ஹரிமோகன் (48) ஆகியோர் பலியாகினர்.
ராகுல் (27) என்பவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்கித், ஹரிமோகனின் பெண்ணைக் காதலித்ததாகவும் இது பெண்ணின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜு, மோனு மற்றும் கோவர்த்தன் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.
மேலும், கிராமத்தில் அமைதி திரும்பியதாகவும் காவலர்கள் அந்தப் பகுதி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.