பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வரும் ஜனவரி 22ஆம் நாள் நடக்கவிருக்கும் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது, "நேற்று பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்கச் சென்றோம். முன்னறிவிப்பின்றி சென்றதால் அவர் வேறு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அவரை சந்திக்க முடியவில்லை.
அதனால் அவரைச் சந்திக்க வேண்டி கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி பெற்றவுடன் அவரை நேரில் சென்று அழைக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: காங்கிரஸில் இணையும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!
ராமர் கோயிலின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் கருதி ஜனவரி 22 அன்று மக்கள் திரளாக வரவேண்டாம் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி காமேஷ்வர் சௌபால் தெரிவித்துள்ளார்.
6500 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஜனவரி 22-ல் அழைப்பிதழோடு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் 'மத நம்பிக்கை என்பது தனிநபர் விருப்பம். அதை அரசியல் ஆதாயமாக பயன்படுத்தக்கூடாது' எனத் தெரிவித்துள்ளார். .