

ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் புத்தாண்டில் தங்களது பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதில், கேபினட் அந்தஸ்தில் இருக்கும் அமைச்சர் அவினாஷ் கெஹ்லாட், தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்களின் தொகுப்பிலிருந்து மகாத்மா காந்தி மற்றும் பாபா சாஹேப் அம்பேத்கரின் புகைப்படங்களை நீக்கியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ராஜஸ்தானில் இதுவரை பாஜக முதல்வர்களும், இதர அமைச்சர்களும் தங்களது அலுவலகங்களில் இந்தப் புகைப்படங்களைத்தான் வைத்திருந்தனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமரிசித்து இருக்கிறார்கள். இவர் பதவியேற்றுக்கொண்டு அமைச்சரானதும், தனது நாற்காலியில் போய் அமர்கிறார். உடனடியாக அவர் இந்த அரசியலமைப்பின் தந்தையாகப் போற்றப்படுபவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, ஆர்எஸ்எஸ் நிறுவனரின் புகைப்படத்தை அங்கு மாட்டியிருக்கிறார் என்று விமரிசித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து எழுந்த விமரிசனங்களால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் போல அவினாஷ் கெஹ்லாட். இது பற்றி அவர் கருத்துக் கூறுகையில், இன்றுதான் எனதுமுதல் நாள். எனது அலுவலகம் இன்னமும் முழுமையாக ஒழுங்கமைக்கப்படவில்லை. நேரமின்மையால், அனைத்து தலைவர்களின் புகைப்படங்களும் இன்னும் முழுமையாக வைக்கப்படவில்லை. விரைவில் அந்தப் புகைப்படங்கள் வைக்கப்படும். அனைவருக்கும் முழு மரியாதை வழங்கப்படும் என்றார்.
அவர் பதவியேற்றதும் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபோது, அவரது பின்னணியில் இருந்த புகைப்படங்களில் காந்தி மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்கள் இல்லாதது குறித்து கடும் சர்ச்சை வெடித்தது. தற்போதைக்கு அங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதல்வர் பஜன்லால் ஷர்மா உள்பட 7 பேரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அரசில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 22 அமைச்சா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அவா்களில் 17 போ் முதல்முறையாக அமைச்சா்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 பேரவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. புதிய முதல்வராக பஜன்லால் சா்மா, துணை முதல்வா்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோா் பதவியேற்றனா்.
இந்நிலையில் மாநில அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் முன்னாள் மத்திய அமைச்சா் ராஜ்யவா்த்தன் சிங் ரத்தோா், மூத்த பாஜக தலைவா் கிரோடி லால் மீனா உள்பட 22 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.
ஜாதிய மற்றும் பிராந்திய ரீதியிலான சமநிலைக்கு வழிவகுக்கும் பொருட்டு பிராமண சமூகத்தைச் சோ்ந்த 2 பேரும், ஜாட் சமூகத்தைச் சோ்ந்த 4 பேரும், ராஜபுத்திரா்கள் சமூகத்தைச் சோ்ந்த 3 பேரும், பழங்குடியின மற்றும் பட்டியிலன சமூகங்களைச் சோ்ந்த 3 பேரும் கேபினட் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதிய அமைச்சரவையில் கிரோடி லால் மீனா (72) வயதில் மூத்த அமைச்சராகவும், அவினாஷ் கெலாட் (42) இளம் அமைச்சராகவும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.