தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சர்வதிகார காலத்தில் சிசோடியாவின் துணிச்சலை அவர் பாராட்டியுள்ளார்.
சிசோடியா, மதுபான ஊழல் வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ அவரைக் கைது செய்தது.
பாஜவின் பொய் வழக்கில் சிசோடியா சிறையில் உள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்
அவர் பதிவில், “இந்த நட்பு பழமையானது. எங்களது நட்பும் நம்பிக்கையும் மிக உறுதியானது. மக்களுக்காக பணியாற்றும் ஆர்வமும் மிக பழமையானது. சதி செய்பவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் இந்த நட்பு, பாசம் மற்றும் நம்பிக்கை உடையாது” என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், பொய் வழக்கில் சிசோடியாவை 11 மாதமாக மத்திய அரசு சிறையில் வைத்துள்ளதாகவும் அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக மணீஷ் நிற்பதாகவும் அது எதிர்காலத்திலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி அமைச்சர் அதிஷி, சிசோடியா கையாண்ட துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் இவர், முன்னாள் துணை முதல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகில் சிறந்த கல்வி அமைச்சராக சிசோடியா விளங்கியதாக அதிஷி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிக்க: கரன்பூர் தொகுதியில் முதல் 2 மணி நேரத்தில் 6% வாக்குகள் பதிவு!
2021-22 ஆம் ஆண்டு ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை கோரப்பட்டது. இதில் தொடர்புடையதாக சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.